#4 கதை சொல்ல போறோம்(Kutty Story #4)

இதுதான் உலகமா? இதுதான் வாழ்க்கையா?

சிறுவன் ஒருவன் ஏரிக்கரையில் விளையாடிக்கொண்டிருக்கிறான். அப்போது, “என்னைக் காப்பாற்று”, “என்னைக் காப்பாற்று” என்று ஒரு அலறல். ஆற்றோரத் தண்ணீரில், வலைக்குள் சிக்கியிருக்கும் முதலை ஒன்று சிறுவனைப் பார்த்து பரிதாபமாகக் கதறுகிறது. ‘மாட்டேன்’. உன்னை விடுவித்தால் என்னை விழுங்கிவிடுவாய். ‘காப்பாற்ற மாட்டேன்’ என மறுக்கிறான் சிறுவன். ஆனால், முதலை, “நான் உன்னை சத்தியமாக சாப்பிட மாட்டேன். என்னைக் காப்பாற்று” என்று கண்ணீர் விடுகிறது.

முதலையின் பேச்சை நம்பி சிறுவனும் வலையை அறுக்க ஆரம்பிக்கிறான். அறுத்து முடிப்பதற்குள் சிறுவனின் காலை முதலை பிடித்துக் கொண்டது. “பாவி முதலையே இது நியாயமா?” என்று சிறுவன் கண்ணீருடன் கேட்க, “அதற்கென்ன செய்வது? பசி வந்தால் பத்தும் பறந்துவிடும். இதுதான் உலகம், இதுதான் வாழ்க்கை” என்று சொல்லிவிட்டு விழுங்க ஆரம்பித்தது முதலை.

சிறுவனுக்கு சாவது பற்றிகூட கவலை இல்லை. முதலை ஏமாற்றி விட்டதோடு மட்டுமல்லாமல்,  நன்றிகெட்டதனத்தை ‘இதுதான் உலகம்’ என்று சொல்வதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மரத்தில் இருந்த பறவைகளைப் பார்த்துக் கேட்டான். இதுதான் உலகமா? அதற்கு பறவைகள், “எத்தனையோ பாதுகாப்பாக மரத்தின் உச்சியில் நாங்கள் முட்டை இடுகிறோம். ஆனாலும், பாம்புகள் முட்டைகளை குடித்து விடுகின்றன. அதனால், இதுதான் உலகம்” என்று சொல்கின்றன.

அங்கு மேய்ந்துகொண்டிருக்கும் கழுதைகளைப் பார்த்துக் கேட்கிறான். “நாங்கள் இளமையாக இருந்த காலத்தில் அதிகப்படியான சுமைகளை சுமக்க செய்து, அடித்து, சக்கையாக வேலை வாங்குகிறார்கள். எங்களுக்கு வயதாகி, நடை தளர்ந்தவுடன், தீனிபோட முடியாது என்று விரட்டி விடுவதால், முதலை சொல்வது சரிதான்” என்கின்றன.

ஆடுகளைக் கேட்கிறான், “எங்களுக்கு இரை போட்டு வளர்ப்பவர்களே எங்களை இரையாக்கிக் கொள்வதால், முதலை சொல்வது சரிதான்” என ஆமோதிக்கின்றன.

கடைசியாக ஒரு முயலைப் பார்த்துக் கேட்கிறான். “இதுவல்ல உலகம் முதலை பிதற்றுகிறது” என முயல் சொல்ல, முதலைக்கு கோபம் வந்துவிடுகிறது. “சிறுமுயல் உனக்கு என்ன தெரியும்?” என்று முதலை சொல்லவும், “நீ பேசுவது சரியாகப் புரியவில்லை, தெளிவாகப் பேசு” என்கிறது முயல். காலை விட்டால் சிறுவன் ஓடிவிடுவான் என்ற முதலையைப் பார்த்து முயல் பெரிதாக சிரித்தது. உன் வாலை வைத்து அவனை அடித்து விட முடியாதா? ஒரே அடியில் அவனை வீழ்த்திவிட முடியும் உன்னால் என்றவுடன், கர்வத்துடன் காலை விட்டுவிட்டு, இதுதான் உலகம் என பேசத் துவங்கியது முதலை.

முயல் சிறுவனைப் பார்த்து, ‘நிற்காதே! ஓடிவிடு” என்கிறது. சிறுவன் ஓடிவிடுகிறான். வாலால் அடித்து விடலாம் என நினைத்த முதலைக்கு ஏமாற்றமாகப் போய்விடுகிறது. வலையில் சிக்கியிருக்கும் வால் பகுதியை விடுவிப்பதற்குள் சிறுவனைப் பிடித்தது நினைவிற்கு வருகிறது. கோபத்துடன் முயலைப் பார்க்க, ‘புரிந்ததா? இதுதான் உலகம், இதுதான் வாழ்க்கை’ என்கிறது முயல்.

தப்பியோடிய சிறுவன் கிராமத்தினரை அழைத்துவர, அவர்கள் முதலையைக் கொன்று விடுகின்றனர். சிறுவனோடு வந்த வளர்ப்பு நாய், புத்திசாலி முயலைப் பாய்ந்து பிடிக்கிறது. சிறுவன் காப்பற்றுவதற்குள் முயலை நாய் கொன்று விடுகிறது. உயிராக வளர்த்த நாய்தான் என்றாலும், உயிரைக் காப்பாற்றிய முயலைக் கொன்றுவிட்டதே; அவனால் சகித்துக்கொள்ள முடியவில்லை. கல்லை எடுத்து எரிந்து நாயை விரட்டி விடுகிறான்.

உதவி செய்பவர்களுக்கு உபத்திரவம் ஏற்படுவதும், நேசித்தவர்களையே வெறுக்க நேரிடுவதும் அவனைக் குழப்பிவிடுகிறது. “இதுதான் உலகமா? இதுதான் வாழ்க்கையா?” என்ற கேள்விக்கு பதில் சொல்வார் யாருமில்லை.

#one_minute_one_book #tamil #book #review #kadha_solla_porom #kutty_story #short_story

7 thoughts on “#4 கதை சொல்ல போறோம்(Kutty Story #4)

Add yours

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: