Euskadi Ta Askatasuna..
பெயரைப் பார்த்தவுடன் ஏதோ MNC கம்பெனி என்று நினைத்து இந்தப் பதிவைத் தவிர்த்துவிட வேண்டாம். ETA – இது ஒரு தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கம். இவர்களின் ஆசை, கனவு, லட்சியம், விருப்பம் எல்லாமே பாஸ்க்..பாஸ்க்..பாஸ்க் மட்டுமே.
ஸ்பெயின் நாட்டின் கீழ் தன்னாட்சி அதிகாரத்துடன் இயங்கிவரும் பாஸ்க்-கை தனி சுதந்திர நாடாக்க விரும்பி, அந்த ஒரு நோக்கத்திற்காக மட்டுமே கடிவாளம் போட்டபடி இயங்கிவரும் அமைப்பே இந்த ETA.
ஆரம்பத்தில் நல்ல பிள்ளையாக அமைதி வழியில் போராடிக்கொண்டிருந்த ETA-வை யாரும் கண்டுகொள்ளாத காரணத்தால், கடுப்பான ETA அடுத்ததாக வன்முறையைக் கையில் எடுத்தது. போற போக்கில் அரசாங்க அதிகாரிகள் யார் அவர்களின் கண்ணில் சிக்கினாலும் சுட்டுத்தள்ளிவிட்டுப் போய்க்கொண்டே இருப்பார்கள்.
ஏன் அரசாங்க அதிகாரிகள் கொல்லப்பட வேண்டும்..? அதற்கும் அவர்களிடம் காரணம் உண்டு. எந்த ஒரு காரியத்தில் இறங்கினாலும் முடிந்தவரை வெற்றிக்கனி பறிப்பார்கள். ஏதேனும் ஒரு இடத்தில் சறுக்கலா..? தட்டி விட்டுவிட்டு அடுத்த வேலை பார்க்கக் கிளம்பிவிடுவார்கள்.
இந்த இயக்கத்தில் அதிகளவில் செயல்படுவது இளைஞர்களே. இது ஒரு இளைஞர்களின் இயக்கம் என்று சொல்லுமளவுக்கு வயதானவர்கள் அதிகம் பங்குபெறாத ஒரு இயக்கம்.
“பாஸ்க்” தனி சுதந்திர நாடு கோரிக்கைக்காக இவர்கள் போராடாத வழிகளே இல்லை. அகிம்சை முறையிலிருந்து கார் குண்டுவெடிப்பு சம்பவங்கள் வரை சகல விதங்களிலும் போராடிப் பார்த்த ETA-விற்கு, இதுவரை அதன் நோக்கம் நிறைவேறவில்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயம்.
ETA தொடங்கப்பட்ட நாளில் இருந்து இன்றுவரை, இதில் இருப்பவர்களின் பெயர் என்ன..? எங்கு வசிக்கிறார்கள்..? இவர்களின் தலைவர் யார்..? எங்கு வெடி மருந்துகள் தயாரிக்கின்றனர்..? என்பது போன்ற எந்தத் தகவல்களும் இதுநாள்வரை யாருக்கும் தெரியாது.
தங்கள் செயல்பாடுகளுக்கான செலவுக்காக ETA மக்களிடம் நிதி வசூலித்து அதில் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளும். இதில் பிரச்சனை என்னவென்றால், கட்டாய நிதியும் மக்களிடம் வசூலிக்கப்பட்டது. சன்மானம் தர மறுப்பவர்களை சரமாரியாகக் கொன்றுவிட்டு போயேபோய்விடும்.
ஒரு மாதத்தில் நான்கு (அ) ஐந்து முறை அங்கங்கே குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழும். ஆனால் மற்ற இயக்கங்களைப் போல இல்லாமல் ETA தனக்கென்று ஒரு வழிமுறையைப் பின்பற்றும். அதாவது, எந்த இயக்கமும் எந்த இடத்திலாவது குண்டுவைத்தால், குண்டுவெடிப்பிற்கு பொறுப்பேற்காது.
இந்த இடத்தில் இந்த நேரத்தில் குண்டுவெடிக்கும் என முன்கூட்டியே தகவல் தெரிவித்துவிட்டுப் பின் அசால்ட்டாக களத்தில் இறங்குவதுதான் ETA-வின் ஸ்டைல். இவர்கள் நிகழ்த்திய பிரதமரின் கார் வெடிப்பு சம்பவம் பெரிய அளவில் பேசப்பட்டது. ரத்தம் தெறிக்க தெறிக்க சம்பவங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கும் ETA-விற்கு மக்களிடம் ஆதரவு குறைந்து வரும் சூழலில் இன்றளவும் தனி நாட்டுக்காகப் போராடிக்கொண்டிருக்கிறது ETA.
பா. ராகவன் அவர்களின் terrorism series வரிசையில் எட்டாவதாக வெளிவந்துள்ள புத்தகம் ETA ஓர் அறிமுகம். இந்த இயக்கத்தைப் பற்றி அக்குவேர் ஆணிவேராகத் தொகுத்து வழங்கியிருக்கிறார் எழுத்தாளர்.
#one_minute_one_book #tamil #book #review #pa_raghavan #ETA_an_introduction #ETA_oor_arimugam
want to buy : https://www.goodreads.com/book/show/36652026-e-t-a