ஜன சந்தடி – இரைச்சல் – புகை – கண்கூசும் கண்ணாடி கட்டிடங்கள். உங்கள் பரபரப்பான நேரங்களின் போது தேநீர் இடைவெளியில் வாசிக்கும் நாளிதழில் ஏதோ ஒரு மூலையில் யானைகளைப் பற்றிய செய்திகளைப் படித்ததுண்டா..?
கோவில் யானைகளைப் பற்றியோ, கும்கி யானைகளைப் பற்றியோ அல்ல. தென்னிந்திய அடர்வனங்களில் வாழும் காட்டு யானைகளைப் பற்றி என்றாவது படித்தது உண்டா..?
சில நிமிடங்கள் தனிமையை உணர முயற்சியுங்கள்…அடுத்து வாசிக்கும் முன்…

இயற்கைக்கே உரித்தான வாசனையும்..அழகிய சலனங்களால் ஆன நிசப்தமும்..சூரியனில் மிளிரும் பச்சையும்..தேகத்தை வருடும் தென்றலும்..ஒரு காட்டின் அடையாளங்கள். இவற்றை என்றாவது அனுபவித்தது உண்டா..? நம்மைவிட அனைத்திலும் சிறந்த காட்டு விலங்குகளை தூரத்தில் நின்று பார்த்து ரசித்தது உண்டா..? தலை நிமிர்ந்து கம்பீரமாக நிற்கும் மலைகளை உச்சிமுகர்ந்தது உண்டா..? உடலை இழந்து..ஆர்ப்பரிக்கும் மனதை இழந்து..ஓரிரு சொற்ப நிமிடமாவது இயற்கையோடு இயற்கையாக தொலைந்து போனது உண்டா..?
இதில் கிடைக்கும் மென்மையும், நெகிழ்ச்சியும், உளப்பூர்வமான ஒரு தாக்கத்தை தரக்கூடியது, வேறு எதுவும் தராது.
இதுபோல் ஒரு சிறப்பான அனுபவத்தைத் தரும் ஒரு புத்தகம் “யானை டாக்டர்”.
அடர்ந்த காட்டில் ஒரு குளிர் காலை வேளையில் ஒரு வன அதிகாரியின் தொலைபேசி அழைப்பில் கதை தொடங்குகிறது. இது டாக்டர்.கே பற்றிய கதை. பேன்ட் – சர்ட் போட்ட, டாக்டர் படித்த, இயற்கைக்கு பிடித்த ஒரு வனமகனின் கதை. இக்கதையில் சொல்லப்படும் கருத்துக்களும், டாக்டர்.கே வரும் பக்கங்களும் என்னையும் அவருடன் வாழும் மாயையைக் கொடுத்தது. நீங்கள் வாசிப்பிற்கு புதிதாக இருந்தால், நீங்கள் படிக்கப்போகும் முதல் அழகான புத்தகம் இது.
“இங்கே வலி உண்டு, நோய் உண்டு, மரணம் உண்டு.. ஆனால் கீழ்மை இல்லை. ஒரு துளிகூட கீழ்மை இல்லை”.
-யானை டாக்டர்
காடுகளில் பயணிக்கும் ஒரு வன மருத்துவரோடு நாமும் இணைவோம் ஒரு அழகான பயணத்திற்கு.
குறிப்பு : இக்கதையில் வரும் டாக்டர்.கே எனும் டாக்டர். கிருஷ்ணமூர்த்தி பற்றிய அனைத்து தரவுகளும் நிஜம். இத்தகைய மாமனிதர் வாழ்ந்தது உண்மை. அவர் காலத்திற்கும் தென்னிந்திய யானைகளின் நினைவுகளில் வாழ்ந்துகொண்டு இருப்பார்.
#one_minute_one_book #tamil #book #review #short_story #doctor_k #doctor_krishnamoorthy #yaanai_doctor #elephant_doctor
Leave a Reply