25 வருடங்களுக்கு முன்..
காதலை மையப்படுத்தி சேதுபதி எழுதிய நீ..நான்..தாமிரபரணி.. நாவல் வெகுவாகப் பிரபலமாகிறது. ஆனால், சில நாட்களிலேயே நாவல் எழுதிய ரைட்டர் சேதுபதி காணாமல் போகிறார். ரைட்டரைத் தேடிச் சென்ற சிலருக்கு பெரிய இடத்தில் இருந்து மிரட்டலும் எச்சரிக்கையும் வந்த வண்ணம் இருக்கிறது.
25 வருடங்களுக்குப் பிறகு..
சேதுபதியைத் தேடும் பொறுப்பை தன்னுடைய “உண்மை” பத்திரிக்கையின் துடிப்பான ரிப்போர்ட்டரான அருணிடம் ஒப்படைக்கிறார் ஆசிரியர் அம்பலவாணன். அவரும் ஒரு காலத்தில் சேதுபதியைத் தேடச் சென்று எதிரிகளின் கோபத்தை சம்பாதித்துக் கொண்டவர்.
அருண் பற்றி சில வரிகள்..
எந்திரத்தனமான அப்பா – ராஜராஜன், பாசமான அம்மா – மாதுரி என பணக்கார வீட்டுப் பையன். கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு ஆசைப்பட்டு ரிப்போர்ட்டர் ஆனவன். மற்ற பெண்களில் இருந்து வேறுபட்ட காவ்யாவைக் காதலித்து வருபவன். எடுத்த காரியத்தில் இதுவரை வெற்றியை மட்டுமே நிலைநாட்டி வருபவன்.
சேதுபதியின் நீ..நான்..தாமிரபரணியை ஒரே மூச்சில் படித்து முடித்த அருண் களத்தில் இறங்க முடிவு செய்கிறான். ஆனால், அவன் சென்ற இடம் எங்கும் அவனுக்கு உருப்படியான ஒரு தகவலும் கிட்டாமல் ஏமாற்றமே மிஞ்சியது.
ஒரு கட்டத்தில் அந்த நாவலில் இருந்த ஜோடி ஒரு நிஜக் காதல் ஜோடி என்பதை அறிந்த அருண், ஆசிரியரை விட்டுவிட்டு கதையின் நாயகன்-நாயகியைத் தேடுகிறான். ஒவ்வொரு விஷயமாக வெளியே வரவர எதிரி உஷாராகிறான். ஆனால், அருண் விடுவதாக இல்லை.
நாவலில் இருந்த கதையின் படியே ஒவ்வொரு விஷயமாக நடந்து வருவதை உணர்ந்த அருண், மிகுந்த சிரமங்களுக்கிடையில் அந்த ஜோடி தங்கியிருந்த கிராமத்தை வந்தடைகிறான். அங்கிருந்து கதையின் போக்கில் பயணித்த அருண் தானும் அந்தக் கதையில் சம்பந்தப்பட்டிருப்பதை அறியாமல் இருந்த அவன் உண்மையைக் கண்டுபிடித்தானா..? என்பதே மீதிக்கதை.
கதையின் ஆரம்பத்தில் இருந்த விறுவிறுப்பு கொஞ்சமும் குறையாமல் கடைசி வரை ஒருவித பதற்றத்திலேயே வாசகர்களை வைத்திருக்கும். குடும்ப நாவல் என்று சொல்ல முடியாத அளவுக்கு என்.கணேசன் அவர்கள் எழுதிய வித்தியாசமான மற்றும் அனைவரும் ரசிக்கக் கூடிய ஒரு கதையாக இருக்கலாம்.
#one_minute_one_book #tamil #book #review #n_ganesan #nee_naan_thaamirabharani
Leave a Reply