காபரே டான்சர்களைத் தீவிரமாக வெறுக்கும் மனநோயாளியான ஹரி, தனியார் மனநல மருத்துவமனையில் இருந்து தப்பிச் செல்கிறான். மருத்துவமனை பேர் கெட்டுவிடக் கூடாது என்பதற்காக டாக்டர் வேணுகோபால் ஹரி காணாமல் போன இரவே விஷயத்தைப் போலீசிடம் கொண்டு போகாமல் லேசர் டிடெக்ட்டிவ் ஏஜென்சியைச் சேர்ந்த நரேனிடம் உதவி கோருகிறார். ஆனால், எதிர்பாராத விதமாக அடுத்த நாளே தாரா ஹோட்டலில் காபரே டான்சரான தீபிகா கழுத்து நெரிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்படுகிறாள்.
தீபிகாவும் அதே ஹோட்டலில் மேனேஜராக இருந்த சங்கீத்தும் காதலித்த விவரம் போலீசிற்குத் தெரிய வருகிறது. இந்நிலையில் சங்கீத் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள இருந்த விஷயத்தை அறிந்த போலீஸ் அவன்மேல் சந்தேகப் புள்ளியை வைக்கின்றனர். ஆனால் அவன் நிரபராதி என்ற உண்மையைப் பின்னர் அறிகின்றனர்.
அடுத்ததாக அதே பாணியில் குடும்பப் பெண்ணான சுபத்ரா கொலை செய்யப்படுகிறாள். பின்னர் அவளும் ஒரு காபரே டான்சர் என்ற உண்மையைப் போலீசார் கண்டுபிடிக்கின்றனர்.
மறுபக்கம் ஹரியைத் தீவிரமாகத் தேடிக்கொண்டிருந்த நரேனுக்கு ஒரு துப்பு கிடைக்கிறது. இறந்து போன இரண்டு பெண்களின் கழுத்திலும் இருந்த தடயங்கள் ஒரே மாதிரியாக இருக்க, குற்றவாளியான ஹரியைப் பிடிக்க ஒரு திட்டம் போடுகிறான் நரேன்.
தடயத்தைப் போலீசிடம் சொல்வதற்காக போலீஸ் ஸ்டேஷன் சென்ற நரேனுக்கு ஒரு பேரதிர்ச்சி. அங்கே ஹரி சிறையில் இருந்தான். நடந்த கொலைகளுக்கு காரணமான நபர் யார்..? ஹரி காபரே டான்சர்களை வெறுப்பதற்கான காரணம் என்ன..? கொலைகளின் நோக்கம் என்ன..?
#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #uyirin_uyire
want to buy : https://noveljunction.com/BookInfo.aspx?bookRefId=335
Leave a Reply