தந்தையை இழந்த அரவிந்துக்கு கல்யாண வயதில் ஒரு அக்காவும், இரண்டு தங்கைகளும் இருக்க, குடும்பத்தில் வருமானம் இல்லாததால் அக்கா ரேணுகாவின் திருமணம் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. இரண்டு வருடங்களாக வேலை தேடி சலித்துப் போன அரவிந்த் அன்றைய தினம் இன்டர்வியூவிற்கு கிளம்பிக்கொண்டிருந்தான். பிரபலமான கங்கா கௌரி கம்பெனியில் இன்டர்வியூ.
அவநம்பிக்கையுடன் இன்டர்வியூ கிளம்பிய அவனுக்கு எதிர்பாராத விதமாக அந்தக் கம்பெனியில் வேலை கிடைக்கிறது, கூடவே விபரீதமான ஒரு கோரிக்கையுடன். தன்னுடைய மகள் தேன்மொழியின் தற்கொலைக்குக் காரணமாக இருந்த மிஸ் இந்தியா புகழ் ப்ரியலதாவைத் தீர்த்துக் கட்டினால் இந்த வேலை அரவிந்துக்கு கிடைக்கும் என உறுதி கூறுகிறார் கம்பெனி எம்.டி கருணசேகர்.
பயந்தாங்கொள்ளியான அரவிந்த் இந்த விபரீதத்திற்கு ஒப்புக்கொள்ள யோசிக்கிறான். மேலும் மிகவும் பிரபலமான ப்ரியலதாவைக் கொலை செய்வது அவ்வளவு எளிதான காரியம் இல்லை என்பதை உணர்கிறான்.
வேலை கிடைத்தால் தான் தன்னுடைய அக்காவிற்குத் திருமணம் நடக்கும் என்பதை உணர்ந்த அவன் கருணசேகரின் நிபந்தனைக்கு ஒப்புக்கொள்கிறான். மேற்கொண்டு ப்ரியலதாவைக் கொல்வதற்கு முழு நீள திட்டத்தை அரவிந்திடம் கூறிய கருணசேகர் தன்னுடைய சைலென்சர் துப்பாக்கியும் கொடுத்து அனுப்புகிறார்.
ஒருவழியாக பயத்துடன் ப்ரியலதாவின் வீட்டை அடைந்த அரவிந்த் அறையில் அவள் இல்லாததால் அதிர்ச்சி அடைகிறான். சிறிது நேரம் ப்ரியலதா வீட்டின் சன் ஷேடின் மேலேயே நின்று கொண்டு அவள் அறையை நோட்டம் விடுகிறான்.
திடீரென டெலிபோன் அலற, சத்தம் கேட்டு வந்த வேலைக்காரி போன் பேசிவிட்டு திரும்ப யத்தனித்த வினாடி, சன் ஷேடில் யாரோ மறைந்திருப்பதைப் பார்த்துவிட்டு சத்தம் போடுகிறாள். சுதாரித்த அரவிந்த் தப்பித்து சென்று நடந்த விஷயத்தைக் கருணசேகரிடம் சொல்கிறான்.
இந்நிலையில் அடுத்த நாள் காலையில் ப்ரியலதா சுடப்பட்டு இறந்த செய்தி வருகிறது. போலீஸ் நேராக அரவிந்தின் வீட்டிற்கு வர, துப்பாக்கியை வீட்டில் மறைத்து வைத்திருந்த அவன் நிலை என்ன..? ப்ரியலதாவைக் கொலை செய்தது யார்..? கொலைக்கான மோட்டிவ் என்ன..? கருணசேகரின் கோரிக்கை நியாயமானதா..?
#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #karuppu_vaanavil
want to buy : https://noveljunction.com/BookInfo.aspx?bookRefId=636
Leave a Reply